கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, கட்சி மாறி ஓட்டளிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் 14 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கியது. உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் சரண் அடைந்து, 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதமும் வழங்கி, ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என, நீதிபதி உத்தரவிட்டார்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில், தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்ததால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையத்தில் உள்ள வீட்டிலும், கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வீட்டிலும், கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை என தகவல் வெளியாகி உள்ளது.