தமிழக செய்திகள்

வேளாண் சங்கமம் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது.முதல் நாளான இன்று முதலமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருச்சி:

வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8-ந் தேதி நடந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது. அதன்படி, வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த சங்கமம் நடக்க உள்ளது.

திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து, நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் இந்த சங்கமத்தில் கலந்துரையாடப்படுகிறது.