அடையாளம் தெரியாத கார் ஒன்று குரங்கின் மீது மோதியதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அருகே பூங்கா உள்ளது.
இன்று காலை பூங்கா அருகே உள்ள சாலையோரம் 5 வயது மதிக்கத்தக்க குரங்கு நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, அந்த குரங்கின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப்பயணிகள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். வலியால் துடித்த குரங்கு, அங்கிருந்து மெதுவாக ஒரு மரத்தின் அடியில் வந்து படுத்துக் கொண்டது. அந்த குரங்கால் அடுத்த எழும்பவே முடியவில்லை. ஒரே இடத்தில் படுத்து கிடந்தது.
இதனை பார்த்த சக குரங்குகள், காயம் அடைந்த குரங்கை தடவி தேற்றுவதும், அதனை எழும்பச் சொல்லி முயற்சித்ததும் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு ஒரு படிமேலாக குட்டி குரங்கு ஒன்று பிஸ்கெட் எடுத்துச் சென்று காயம் அடைந்த குரங்குக்கு கொடுக்க முயன்றது. ஆனால் காயம் அடைந்த குரங்கால் சாப்பிட முடியவில்லை.
இந்த காட்சியை பார்த்து அங்கு நின்ற பெண்கள் கண் கலங்கினர். இதற்கிடையே பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை ஊழியர்கள் காயம் அடைந்த குரங்கை மீட்டுச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.