தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது.
உடல்நலன் குறித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 31.08.2026 அன்று மாலை டெல்லிக்கு சென்றிருந்தார்.
டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (01.09.2026) நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திலும், இன்றும், நாளையும் நடைபெறும் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று (01.09.2026) அதிகாலையில் ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கத்தின் காரணமாக டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின்பு, உடனடியாக சென்னை திரும்பி நேற்று மாலை 03.00 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் சிகிச்சைகளுக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் தற்பொழுது குறைந்துள்ளது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.