தமிழக செய்திகள்

வாணியம்பாடி அருகே நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி..!

தட்டி கேட்க முயன்ற பெண்களை பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்த நபரால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் நூறு நாள் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த நபரை சில பெண்கள் தட்டி கேட்டபோது ஆத்திரமடைந்த அந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கு இருந்த தென்னை மட்டையால் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அந்த நபரும் அங்கிருந்த பெண்களையும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களையும் பதிலுக்கு தாக்கியதுடன் தன் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து அங்கிருந்த பெண்களின் மீது ஊற்றி தீயிட முயன்றுள்ளார்.

சுதாரித்த பெண்கள் உடனடியாக அம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அம்பலூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும் அதே பகுதியில் உள்ள தனது மச்சான் வீட்டிற்கு சொத்து தகராறு காரணமாக அடிக்கடி வந்து தகராறு செய்வதும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த அக்காவிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் அதனை தட்டி கேட்ட பெண்களிடம் சில்மிஷம் செய்து ரகளை ஈடுபட்டு 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட முயற்சித்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.