தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதன் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டு, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இனி வரும் நாட்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே முதலில் பாடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மீண்டும் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதமும், அதன்பிறகு கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது பாடப்படுவது குறித்து முதலமைச்சர் விஜயிடம் கேட்டபோது, ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அரசின் உத்தரவுப்படி வந்தே மாதரம் தான் முதலில் பாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.