தமிழக செய்திகள்

ரெயிலுக்குள் துண்டு துண்டாக சிறுமியின் உடல் - தந்தை ஆணவக்கொலை செய்தது அம்பலம்

மகளைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய பிறகு, அடையாளத்தைத் மறைப்பதற்காக தலையைத் தனியாக வெட்டி ஒரு குளத்தில் வீசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கோமதி நகர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

கடந்த மே 17 அன்று, நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலின் ஸ்லீப்பர் கோச்சில், தகரப் பெட்டியில் தலை இல்லாத சிறுமியின் உடல் துண்டு துண்டதாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கைகால்கள் தனியாக மற்றொரு பையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

விசாரணையில், கொலை செய்யப்பட்டது ஷப்பா (15) என்ற சிறுமி என்பதும் தந்தையே சிறுமியை ஆணவக்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட ஷப்பா, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை பிக்கன் அன்சாரி கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஷப்பா தனது காதலைக் கைவிட மறுத்ததால் தனது சகோதரி நூர்ஜஹான் மற்றும் அவரது கணவர் முஜிபுல்லா ஆகியோருடன் இணைந்து மே 16 அன்று சிறுமியை கொன்றுள்ளார்.

கொலை செய்வதற்கு முந்தைய நாள், அன்சாரி தனது மனைவியையும் மற்ற இரண்டு மகன்களையும் ஒரு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மகளைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய பிறகு, அடையாளத்தைத் மறைப்பதற்காக தலையைத் தனியாக வெட்டி ஒரு குளத்தில் வீசியுள்ளார்.

உடல் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி தகரப் பெட்டியிலும் பையிலும் அடைத்து ரெயிலில் வீசிச் சென்றுள்ளார்.

குஷிநகரில் உள்ள தம்குஹி ரோடு ரயில் நிலையத்தில், மூன்று பேர் சேர்ந்து இந்தத் தகரப் பெட்டியை ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிக்குள் வைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

அந்தத் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் இருந்தது தந்தை அன்சாரி, அவரது சகோதரி நூர்ஜஹான் மற்றும் மைத்துனர் முஜிபுல்லா என்பதை உறுதி செய்து, அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.