சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
ஊழியர் காப்பீட்டு கழகம், மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான இளம் மருத்துவர்களை ஆதரிப்பதிலும் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ள உள்ளனர். நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும்.
நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை எளிதாக கிடைக்க அதன் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் இஎஸ்ஐ சென்று சேவை புரிந்து வருகிறது.
பீடி மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.