அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே. நகர் அம்மாவின் தொகுதியாக இருந்தது. அம்மா இருக்கும்போது எத்தனை திட்டங்கள் தந்தார்களோ, அதேபோல் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு அனைத்து நன்மைகளும் முழுமையாகக் கிடைக்கும். அம்மா இருக்கும்போது, ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி கொடுத்தார்கள். இந்த பகுதிக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்து மக்களுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைத்தார்கள்.
அம்மாவின் உங்கள் மகத்தான ஆசியோடு அதிமுக ஆட்சி மலர்ந்ததும், பல்வேறு திட்டங்கள் இந்த தொகுதியில் தொடரும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். கடந்த 5 ஆண்டுகள் திமுக அரசு கொடுமையான ஆட்சியை கொடுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலைத்தான் மக்கள் பார்த்தார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகரத்திலும், தமிழகத்திலும் ஏதாவது ஒரு பெரிய திட்டம் கொண்டுவரப்பட்டதா?
இந்த ஆட்சியில் பார்ப்பது எல்லாம், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். இதுதான் நாள்தோறும் நடக்கிறது. கழிப்பறை கட்டண வசூலில் கூட கொள்ளையடித்த கட்சி திமுக. கேவலம், கழிப்பறையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
திமுக என்றால் ஊழல். ஊழல் என்றால் திமுக. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட திமுக அரசுதான், ஊழலுக்காக கலைப்பட்ட ஒரே அரசு. அதேபோல் ஊழலின் ஊற்றுக்கண் திமுக. ஊழல் என்று சொன்னால் திமுக தான் நினைவுக்கு வரும். திமுக என்றால் ஊழல் தான் நி்னைவிற்கு வரும். அப்படிப்பட்ட ஊழல் நிறைந்த கட்சி மீண்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.