திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள் மூலம் மழைக்காலத்தில் நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலம் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. இதனால் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்தும் முற்றிலும் குறைந்து விட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 219 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 32.58 அடியாக உள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் சாகுபடி பணியை மேற்கொள்ள விவசாயிகள் ஆவலோடு உள்ளனர்.
அதற்கு முன்னதாக அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.