தமிழக செய்திகள்

விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து வருகிறது தவெக அரசு என்கிறார் உதயநிதி.

தவெக அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாபெரும் ஆர்ப்பாட்டம்

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகதாட்டு பிரச்சனையை கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதல் மந்திரியை சந்திக்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது...

இப்படி தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் ஷூட்டிங் மாடல் தவெக அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திமுக சார்பில் தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம்... விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை

முன்னதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்