தமிழக செய்திகள்

உதய்பூர் படுகொலை- பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்

சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார். பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது.

மாலை மலர்

சென்னை:

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கன்னையா லால் என்ற தையல்காரர், பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ. ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது காட்டுமிராண்டித்தனம். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு அம்மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார்.

நமது மாண்புமிகு பாரத பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது. ஆனால் தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்களோ தொடர் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார்கள்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.