பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.