தமிழக செய்திகள்

‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி

கர்நாடகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா?

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது மிகவும் தவறான ஒரு நிலைப்பாடு என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.

ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான் முதலமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான். அது குறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பது தான்.

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?

அந்த அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.

மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப் பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.

மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும்.

மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது குறித்தும், மேகதாது விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் வாய் திறவாதது குறிப்பிடத்தக்கது.