தமிழக செய்திகள்

த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் - கரூர் நீதிமன்றம் உத்தரவு

விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இன்று மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று மதியழகன் மற்றும் பவுன்ராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT