தமிழக செய்திகள்

தூத்துக்குடி-சென்னை விமான கட்டணம் ரூ.17 ஆயிரமாக உயர்வு

விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று திரும்பினர். பெரும்பாலானோர் பஸ், கார்கள் மற்றும் ரெயில்களில் வந்தாலும் சிலர் விமானங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தனர். இதனால் நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓரிரு விமானங்களில் மட்டுமே, ஒரு சில டிக்கெட்டுகள் உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்கள் பயணிகளை அதிர்ச்சி அடையும் விதத்தில், 3 மடங்கு வரை அதிகரித்துள்ளன.

தூத்துக்குடி-சென்னை வழக்கமான கட்டணம் ரூ.5,354 நேற்று இரவு முதல் இன்று காலை வரை விமான கட்டணங்கள் ரூ.17,089 வரை உயர்ந்து இருந்தது. இதேபோல் மதுரை-சென்னை ரூ.8ஆயிரம் வரையும், திருச்சி-சென்னைக்கு ரூ.9 ஆயிரம் வரையும் உயர்ந்து இருந்தன. விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.