தமிழக செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு அமமுக பாடுபடும்- டிடிவி தினகரன்

பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொது வேட்பாளர்

முதலமைச்சர் விஜய் திரைப்படங்களில் கதாநாயகனாக தோன்றினாலும், நிஜத்தில் அவர் ஒரு வில்லன் தான்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது நல்ல யோசனை.

இதனை கூட்டணி கட்சிகளுடன் விரிவாக கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு அ.ம.மு.க., பாடுபடும்.

புதிய சட்டமன்றம்

மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கக்கூடிய மற்றும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடிய பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

தமிழக முதலமைச்சரின் வீட்டிற்கு அருகிலேயே சட்டமன்றத்தைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது .

அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தற்போது விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.வுடன் இணைப்பா?

அ.தி.மு.க., கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், 2 கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்படப்போகிறது என்று வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT