தமிழ்நாடு செய்திகள்

செந்தில்பாலாஜி குணம் அடைந்து வருகிறார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

மாலை மலர்

சென்னை:

அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.