தமிழக செய்திகள்

தந்தையைபோன்று மகனுக்கும் நேர்ந்த சோகம்: ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் உயிரிழப்பு

திருவொற்றியூர்-வ.உ.சி. ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகர் முதல் தெருவில் வசித்து வந்தவர் கிஷோர்குமார் (வயது 23). இவர், திருவள்ளூர் ரெயில்வேயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை திருவள்ளூருக்கு வேலைக்கு செல்வதற்கு ரெயில் நிலையம் சென்றார். இதற்காக திருவொற்றியூர்-வ.உ.சி. ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கிஷோர் குமாரின் தந்தை வேணுகோபால் ரெயில்வே ஊழியராக இருந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்துபோனார்.

இதனால் தந்தையின் வேலையை வாரிசு அடிப்படையில் மகன் கிஷோர் குமாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் தந்தையை போல மகனும் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.