தமிழக செய்திகள்

நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், சின்னக்கல்லாறு அருவி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

கோடை விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், சின்னக்கல்லாறு அருவி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்த சுற்றுலாதலங்கள் அமைந்துள்ள பகுதி அனைத்தும் வனத்தை ஒட்டி அமைந்திருப்பதால் அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, நுழைவுக்கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே நல்லமுடி காட்சிமுனையை ஒட்டியுள்ள வனத்தில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக நல்லமுடி காட்சி முனைக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து நுழைவுவாயிலில் தடுப்பு அமைத்தனர்.

மேலும் எஸ்டேட் சாலையோர பகுதிகளில் யானைகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து துன்புறுத்தல் செய்யும் சுற்றுலாப்பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.