சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2015 செப்டம்பர் 1-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள் இத்தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தொடங்கியது.
இதை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணி சான்றை விரைந்து வழங்க மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் தான் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பணி சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நாளை (10-ந் தேதி) நிறைவு பெறுகிறது. அதனால் இதுவரையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெட் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.