தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு| Toll Gate

ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வணிகச் சிலிண்டர் விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்குள் குறிப்பிட்ட சில சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை (1-ந்தேதி) முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை, வாணியம்பாடி உள்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வர உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர கட்டண உயர்வு முடிவின் படி இந்த மாற்றம் நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக ரூ.10 முதல் ரூ. 25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

கட்டண உயர்வு பெறும் சுங்கச்சாவடிகளில், 60 கி.மீ. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையில் உள்ள 2 சுங்கச் சாவடிகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை, மாமல்லபுரம் நாவலூர் ஆகியவை அடங்கும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 17 சுங்கச் சாவடிகளுக்கான கட்டண உயர்வு வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் 1 அன்று அமலாகும். போக்குவரத்து அல்லாத வாகன பயனாளர்களுக்காக, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான வருடாந்திர சுங்க அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 முறை பயணிக்க முடியும். இந்த புதிய திட்டம், வரும் ஆண்டுகளில் சுங்க வசூல் சீரான நிலையை எட்ட உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வணிகச் சிலிண்டர் விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆட்டோ கேஸ் பற்றாக்குறை, பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள், ஓட்டல் உணவுகளின் விலை ஏற்கனவே அதிகரித்து உள்ளது. தற்போதைய சுங்கக் கட்டண உயர்வு சரக்கு வாகனங்களுக்குச் செலவை அதிகரிக்கச் செய்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என தெரிகிறது.

இதனிடையே தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்கவும், தடையற்ற போக்குவரத்து மற்றும் பயண நேரத்தைக் குறைக்கவும், ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன்படி, சுங்கச்சாவடிகளில் முழுமையான தானியங்கி கட்டண வசூலை நோக்கி ‘மல்டி லேன் பிரீ புளோ’ எனப்படும் தடையற்ற சுங்க வசூல் முறை, தமிழகத்தில் உள்ள 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 16 சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் என்.எச். 48 நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி, சென்னசமுத்திரம், மற்றும் என்.எச். 45 நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

எம்.எல்.எப்.எப் முறை என்பது பாஸ்ட் டேக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட ஆர்.எப்.ஐ.டி. ரீடர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஏ.என்.ஆர்.பி (தானியங்கி எண் பலகை அங்கீகாரம்) கேமராக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடாகும்.

வாகனங்கள் நெடுஞ்சாலை வேகத்தில் சுங்கப்பகுதியை கடந்து செல்லும் போது, கேமராக்கள் வாகன எண் பலகைகளை படம் பிடிக்கும்; அதே நேரத்தில் ஆர்.எப்.ஐ.டி. ரீடர்கள் பாஸ்ட் டேக் விவரங்களைக் கண்டறியும். கணினி நிகழ் நேரத்தில் வாகனத் தரவைச் சரிபார்த்து, பாஸ்ட் டேக்கில் இணைக்கப்பட்ட கணக்கில் இருந்து சுங்கக் கட்டணத்தைத் தானாகவே கழித்துவிடும். இதனால் சுங்கச்சாவடி தடுப்புகள் அல்லது சாவடிகளின் தேவை இருக்காது.