தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீஸ் நலன் காக்க தனி வாட்ஸ்அப் குழு- டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்களின் நலன் காப்பதற்காக 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இந்த வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் காவலர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பதிவு செய்து தமிழ்நாடு போலீஸ் வெல்பேர் என்ற பெயரிலான இந்த குழுவை தங்களது பகுதிக்கு ஏற்ப அதிகாரிகள் மாற்றம் செய்து செயல்படுத்த வேண்டும்.

உதாரணமாக கீழ்ப்பாக்கம் பகுதி வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதில் போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.