தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பெற்ற 30 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், 30 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் தனது ஆதரவு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தேர்தலில் ராமதாஸ் தரப்பு பா.ம.க. மற்றும் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிகள் இணைந்து களம் காண்கின்றன.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பா.ம.க. கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. அன்புமணி தலைைமயிலான பா.ம.க. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைைமயிலான என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க. தேர்தல் வரலாற்றில் 20-க்கும் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு ஆகிய எனது ஆதரவு பெற்று மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மேற்கண்ட வேட்பாளர்களுக்கு வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்வதற்கு 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் மேலே உள்ள 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.