அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆரணியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் "2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் நின்றார். அப்போது மக்களை சந்தித்து எனக்கு இதுதான் கடைசி தேர்தல். எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்றார். மக்களும் வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் ராமு 700 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமை கிடைக்கும் என்கிறார். உங்களுக்கு பெருமை கிடைக்கிறதுக்காக, மக்களாக கிடைச்சாங்க. அவருக்கு 88 வயதாகிவிட்டது. தேர்தலில் போட்டியிடுவது அவருடைய சொந்த விருப்பம். அதில் தலையிடவில்லை. ஆனால் அவரால் நடக்கவே முடியல. எழுந்திருக்கவே முடியல. எப்படி மக்களுடைய குறைகளை கேட்பாரு.
சட்டசபை உறுப்பினர் என்றால் சட்டசபை தொகுதி முழுவதும் சுழன்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். நடந்து சென்றாலே பிடித்துக் கொண்டு செல்கிறார். நான் தவறாக சொல்லவில்லை. நான் அண்ணன் துரைமுருகனை மதிக்கக் கூடியவன். அவருடைய வயது மூப்பை பார்க்க வேண்டும். அதனால் காட்பாடியில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராமுக்கு வெற்றிச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று துரைமுருகனிடம் செய்திளார் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன் "எடப்பாடி பழனிசாமி பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமென்றால் அவரை என்னோடு நடக்கும் போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றார்.
காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் மனுதாக்கலுக்கு கடைசி நாளான இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.