காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். செல்வ பிரபு வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆண்டு பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடம் பிடித்தது.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்மைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவதாவது:
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நேரில் வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.