தமிழக செய்திகள்

TN Assembly Elections | கடைசி சுற்று வரை பரபரப்பு... இறுதியில் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று (மே 04) காலை தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்தது. வாக்கு எண்ணிக்கையில், இந்திய தேர்தல் வரலாற்றில் மிகவும் அரிதான சம்பவம் அரங்கேறியது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. மற்றும் த.வெ.க. வேட்பாளர்களில் யார் வெற்றி என்பதில் கடைசி வரை இழுபறி நீடித்தது. இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

திருப்பத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. மற்றும் த.வெ.க. வேட்பாளரிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. மொத்தம் 30 சுற்றுகள் நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறிக்கொண்டே இருந்தது.

இறுதி சுற்றின் முடிவில், த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி அமைச்சர் பெரியகருப்பனை விட ஒரே ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அமைச்சர் ஒருவர் புதுமுக வேட்பாளரிடம் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது கவனம் பெற்றுள்ளது.