கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி 7-வது வார்டு கோழியூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
திருவள்ளுவர் நகர் 4 தெருக்களிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து சிறு பாலம் கட்டி ஊர் திருவிழா அன்று 4 தெருக்களிலும் சாமி ஊர்வலம் வர வாய்க்கால் பகுதியில் 300 மீட்டர் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.
காலி நத்தத்தில் ஒரே குடும்பத்தில் வசிக்கும் நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோழியூர் முருகன் கோவில் இடிந்து விழுந்து பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருவள்ளூவர் நகரில் உள்ள வெலிங்டன் வாய்க்காலில் விவசாய உபகரணங்கள் எடுத்து செல்ல புதிய பாலம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்துள்னர்.
இதனை செய்து கொடுக்காததால் தங்கள் பகுதிக்கு யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.