தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் சென்னை சவுகார்பேட்டை பகுதி மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.
வீட்டிற்கு தேவையான பொருட்கள், திருமணத்திற்கு தேவையான பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், துணிகள் என எது வாங்க வேண்டும் என்றாலும் அது சவுகார்பேட்டையில் கிடைக்கும். A to Z என்பார்களே அதுபோல் எல்லா விதமான பொருட்களும் சவுகார்பேட்டையில் கிடைக்கும்.
கடைகள் நிறைந்த பகுதியான சவுகார்பேட்டையில் வட இந்திய மக்கள் அதிகம் பேர் உள்ளனர். வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கும் வட இந்திய மக்கள் சவுகார்பேட்டையில் உள்ளனர். பொதுவாக சவுகார்பேட்டையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
பெரும்பாலான வியாபாரிகள் தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று கூறினர். பெண்களுக்கு அதிக சலுகை கொடுப்பதால் குடும்பத்தினரே தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவோம் என்று பல பெண்கள் கூறினர்.
மாற்றம் தேவை, புதிதாக வரவேண்டும் என்பதால் த.வெ.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று இளம் தலைமுறையினர், நடுத்தர வயதினர் கூறினர்.
எங்கள் ஓட்டு அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.வுக்கு என்று சிலர் தெரிவித்தனர்.
தி.மு.க.வுக்கு 20 பேரும், அ.தி.மு.க.வுக்கு 5 பேரும், த.வெ.க.வுக்கு 15 பேரும் வாக்களிப்போம் என்று கூறினர்.
இளம் தலைமுறையினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் தி.மு.க.வை ஆதரித்தும், த.வெ.க.வை ஆதரித்தும் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஆட்சியை விரும்பும் மக்களை போல, மாற்றத்தையும் பெரும்பாலான மக்கள் விரும்புவது தெரிகிறது.