தமிழக செய்திகள்

TN Assembly Election | நயினார் தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு? தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

சட்டசபை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

மாலை மலர்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்ட மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

பொதுமக்களில் பலர் தி.மு.க.வின் நலத்திட்டங்களை பாராட்டினர். காலை உணவு திட்டம், இலவச பஸ் பயணம், மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை பெரும்பாலான மக்கள் பாராட்டி தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதால் இப்போது மட்டும் அல்ல எப்போதும் அ.தி.மு.க.வுக்கு தான் வாக்களிப்போம் என்று பாட்டிகள் கூறினர்.

மாற்றம் கொண்டு வர வேண்டும், புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று அதற்காக த.வெ.க.வுக்கு வாக்களிப்போம் என்று சிலர் கூறினர். இளம் வாக்காளர்கள் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு என்ன செய்வது, எதற்கு ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடுவதால் என்ன செய்தார்கள் என்று அதிருப்தியில் உள்ள மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக தெரிவித்தனர்.

மொத்தத்தில் தி.மு.க.வுக்கு 12 பேரும், அ.தி.மு.க.விற்கு 15 பேரும், த.வெ.க. 14 பேரும், நோட்டாவுக்கு ஒருவரும் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

மக்களின் இந்த மனநிலை ஓட்டாக மாறி தமிழகத்தை ஆட்சி செய்யப்போவது யார் என்ற கேள்விக்கான விடை மே மாதத்தில் தெரிந்து விடும்.

தற்போது திருநெல்வேலி தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.