திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூரில் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் காண்பித்த பின்னர் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா இந்தியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைய தேவையில்லை. அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வதந்தி பரப்பபடுகிறது. அவற்றை யாரும் நம்பி அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.