தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கி காணப்பட்ட கடல்

பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடல் பொதுவாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட் களில் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பாக நடந்து வருகிறது.

அந்த வகையில் பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அதன்மீது பக்தர்கள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது. ஆனால் கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.