திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இதனால் இந்த கடல் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த கடல் சமீப காலமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில நேரங்களில் வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று பவுர்ணமி என்பதால் திருச்செந்தூர் கடல் இன்று சுமார் 100 அடி உள்வாங்கியது. அய்யா வைகுண்டர் அவதார பதிவரை கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. எனவே கடல் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் விடுமுறை நாளான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
கடற்கரை மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.