தமிழக செய்திகள்

மஞ்சூர் அருகே சாலையை கடந்து சென்ற புலி

சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளில் பொருட்களை தேடுவது, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிப்பது, விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு எடக்காடு அருகே உள்ள சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

சாலையை புலி கடந்து சென்ற சம்பவத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT