தமிழக செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது

மனமுடைந்த தர்ஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை அருகே சக்கரகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினி (வயது 41). ஆட்டோ டிரைவர்.

இவரது மகள் தர்ஷினி (16), இவர் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனை அறிந்த தந்தை தனது மகளிடம் கேட்டார். நான் அது போன்று யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் ரஜினி குடும்பத்தார் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் மற்றும் இவரது தாய், சகோதரி ஆகிய 3 பேரும் தர்ஷினி குடும்பத்தினரை தகாத வார்த்தையால் பேசினர். திடீரென தர்ஷினியை தாக்கினர்.

இதனால் மனமுடைந்த தர்ஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது சம்பந்தமாக ரஜினி கொடுத்த புகாரில் தனது மகளின் சாவிற்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தி இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்ஷினி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கு காரணமான தாய், மகன், மகள் ஆகிய 3 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.