தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் ரீல்ஸ்..!- அண்ணாமலை கண்டனம்

முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூர் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெகவினருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் விஜய் அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.

ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் விஜய் அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம்.

மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.