மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம். 
தமிழக செய்திகள்

இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டு: சென்னை-திருப்பதி சாலையில் கிராம மக்கள் மறியல்

பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்தடை

இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் மற்றும் சிறுவானூர் கண்டிகை பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பின்னர் சீராகவில்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

சாலை மறியல்

இரவு 12.30 மணிவரை மின்வினியோகம் சீராகாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சிறுவானூர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் இரவு ஒரு மணியளவில் அப்பகுதியில் மின்சாரம் சீரானது. பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் மின்தடையை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.