தமிழக செய்திகள்

திருச்செந்தூர்-ராமேசுவரம் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது.

சென்னை:

சென்னை, வாலாஜா சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக சார்பில் சுற்றுலா வளாகத்தில் இருந்து திருச்செந்தூர், ராமேசுவரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும் ராமேசுவரம், சென்று மீண்டும் திங்கட்கிழமை காலை சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சாமி கோவிலில் சிறப்பு தரிசனம், 22 தீர்த்தங்கள் தொடர்ந்து தனுஷ்கோடியையும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3 வேளை உணவும் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com இணையதள பக்கத்திலும் அல்லது சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறி உள்ளார்.