தமிழக செய்திகள்

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சென்னையில் 56 சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.143 முகாம்களில் 4,990 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்தார்.

அப்போது அவர், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள் குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வருவதால் சென்னையில் காற்று மற்றும் மழையின் வேகம் குறைந்துள்ளது.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை, வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சென்னையில் 56 சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

143 முகாம்களில் 4,990 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 3.20 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கி உள்ளோம். மழையில் தாக்கம் குறையும் வரை உணவு உள்ளிட்டவை வழங்கப்படும்.

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்று இரவே வெளியேற்றப்படும். சென்னையில் 2904 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.

மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் வந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது.

இயற்கையை மீறி யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.