தமிழக செய்திகள்

ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டது..!- செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

தவெக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது.

பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் தவெக தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,"மாநில அரசுகள் லோக் பவனின் புல்வெளிகளில் தீர்மானிக்கப்படுவதில்லை; அவை சட்டப்பேரவையின் தளத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றன" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.