தமிழக செய்திகள்

லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

காவல்துறையினர் காலனித்துவ மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கவேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.

லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாச்சார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும்.

காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள்.

தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT