தமிழக செய்திகள்

தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடிக்கு நன்றிகள்..!- நயினார் நாகேந்திரன்

இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ரூ.30,000 கோடி முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெிரவித்துள்ளார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு!

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை CSL Cochin

மற்றும் Mazagaon Dock ஆகிய இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ₹4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ₹30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.