தமிழக செய்திகள்

குமாரபாளையத்தில் ஜவுளி வியாபாரி வீட்டில் 120 பவுன்- ரூ.3 லட்சம் கொள்ளை

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் அங்குள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 120 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவை மாயமாகி இருந்தது.

மணிகண்டன் வெளியில் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

தடயவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து வந்து இங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT