தமிழ்நாடு செய்திகள்

மும்மதத்தினர் கலந்து கொண்ட கோவில் கும்பாபிஷேகம்- தங்கச்சிமடத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Maalaimalar

பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் ராஜா நகரில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் மும்மதத்தினர் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கச்சி மடத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கச்சி மடம் ராஜா நகரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ பெரிய கருப்பசாமி மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பூ, பழம், மாலை, இனிப்பு குத்து விளக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நெற்றியில் விபூதி இட்டு தீபாராதனை எடுத்துக் கொண்டனர்.

கோவிலுக்கு வந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவேற்ற இந்துக்கள் அவர்கள் கொடுத்த சீர்வரிசைகளை பெற்று கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

தங்கச்சிமடத்தில் மும்ம தத்தினர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெற்ற கோவில் கும்பாபிஷேக விழா அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.