கோவை:
கோவை வடவள்ளி அருகே உள்ள கோல்டன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 54). இவர் கோவை நகரின் மத்தியில் உள்ள பிரபல பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவும் கற்றுக் கொடுத்தார்.
இந்தநிலையில் யோகா கற்றுக் கொடுக்கும்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே மாணவிகள் பள்ளி முதல்வரிடம் சென்று புகார் செய்தார்.
ஆசிரியர் ராஜன், யோகா பயிற்சியின்போது தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசுவதாகவும் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஓவிய ஆசிரியர் ராஜனை பிடித்து விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை இன்று கைது செய்தனர்.
கோவையில் 17 வயது சிறுமியை அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு யோகா ஆசிரியர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.