தமிழகத்தின் காற்று மாசுப்படுதலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் “ஸ்வச் வாயு சர்வேக்ஷன்” என்ற தேசிய மதிப்பீட்டில், தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மாசடைந்து வருவதை தற்போது ஆட்சியில் உள்ள அரசாவது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவமழை மாற்றத்தையும் தூண்டிவிடும் இந்த காற்று மாசடைதல் தொடர்வது, ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.
எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளிலும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தும் “மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்" பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆளும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.என இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.