"பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது" என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியின் அரசியல் அனுபவம் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது ஆளுமைக்கும் அனுபவத்துக்கும் இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது" என்று குறிப்பிட்டார்.
மேலும், ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க உரிமை இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இணையாகச் செயல்படுவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.
"பிரதமர் மோடி தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. குறிப்பாகத் தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.
தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதில்லை" என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.