தமிழக செய்திகள்

பெண்களுக்கான எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - தமிழிசை

கஸ்தூரிபாய் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்திற்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.7,500 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கி உள்ளார். கூவம் உள்ளிட்ட நதிகளை சுத்தம் செய்ய, மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. பக்கிம்காம் கால்வாய் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கியது, மகிழ்ச்சியை அளிக்கிறது.

பருவ மழை

பருவ மழை காலங்களில் பக்கிம்காம் கால்வாய் நிரம்பி தான், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து, குடியிருப்புகளை மூழ்கி கொண்டு இருந்தது. இதற்காக நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அரசு மருத்துவமனை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை வேலை நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று, தமிழக மருத்துவ துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். கடந்த காலங்களில் மருத்துவர்கள் குறைவாக இருந்தார்கள். அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சேவை செய்தார்கள். ஆனால் இப்போது மருத்துவர்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கஸ்தூரிபாய் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

தவெக ஒரு மாத ஆட்சியில், சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கஞ்சா, போதை பழக்கத்தை அதிகம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பெண்களுக்கான எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன. தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதைப் போன்ற குற்றங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

ஊழல் கட்டுப்படுத்த வேண்டும். சிஎம்டிஏ வில், 15 நாளில் 300-க்கும் மேற்பட்ட அனுமதிகள் தரப்பட்டு உள்ளன. மின்சார துறை முறைகேடு ஒரு வாரம் கழித்து தான் சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளார்கள். இதில் உள் நோக்கம் இருக்கிறதா? யாரையாவது காப்பாற்ற முயற்சி நடந்ததா? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த புதிய ஆட்சி, இன்னும் அதிக கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும்.

அனைத்துக்கும் போன ஆட்சி மீது குறை சொல்லாமல், நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT