முன்னாள் அமைச்சர் ரகுபதி
தமிழக செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.

தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

தனித் தீர்மானம்

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதை சொந்த குரலிலே பாட வேண்டும் என்கின்ற உத்தரவு மூலம் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டார். திமுக ஆட்சியிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு எல்லா நிகழ்ச்சிகளிலேயும் அது அமல்படுத்தப்பட்டது.

ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்

எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.

எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

சட்டம் கொண்டு வர வேண்டும்

ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம். கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.