திண்டுக்கல்:
1977-ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயிலாக தொடங்கப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ். ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவை இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
பெரும்பாலும் இரவு நேர ரெயில்களே சென்னைக்கு உள்ள நிலையில் பகல் நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் என்பதால் வைகை ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
காலை 7.10 மணிக்கு மதுரையில் புறப்படும் இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு சென்னையை சென்றடையும். சென்னையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் ரெயில் பயணம் செய்பவர்களுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மிகச்சிறந்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பது கஷ்டம் என்பதால் பகல் நேர ரெயிலான வைகை எக்ஸ்பிரசில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வது இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று 45-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்கரிக்கப்பட்டு வந்த ரெயிலுக்கு பயணிகள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தனர். பின்னர் கேக் வெட்டி பயணிகள் அனைவருக்கும் வழங்கினர். இந்த சேவை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் விருப்பம் தெரிவித்தனர்.